டெல்லி :
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் பப்ஜி கேம் உள்பட  89 முக்கிய செல்போன் செயலிகளை, தங்களது மொபைல் போனில் இருந்து உடனே அகற்ற ராணுவ வீரர்களுக்கு ராணுவ தலைமை உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இணைய உலகில் சீனாவின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. குறிப்பாக மொபைல் போனில் உபயோகப்படுத்தப்படும் பெரும்பாலான செயலிகள் சீனாவைச் சேர்ந்ததாகவே உள்ளது. இந்த செயலிகள் மூலம் பயனர்கள் தரவுகள் திருடப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து டிக்டாக் உள்பட 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் பல செயலிகளை மொபைலில் இருந்து நீக்கவும் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் ராணுவ வீரர்கள் தாங்கள் உபயோகப்படுத்தும் சீன செல்போன் செயலிகளை உடனே நீக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளை ராணுவ அதிகாரிகள் பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில்,  ராணுவ வீரர்களள் உபயோகப்படுத்தும் செல்போன் செயலிகள் மூலம் ராணுவ ரகசியங்கள், அவர்களின் இருப்பிடங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் திருடப்படுவதாக சந்தேகம் வலுத்துள்ளது.
இதையடுத்து, பேஸ்புக்,டிக்டாக். ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரசெர், மினி,Zoom, கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளம் ஃபேக்டரி, டிண்டெர்,360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், தம்பிர், ரெட்டிட் உள்பட 89 செயலிகளை உடனே மொபைலில் இருந்து அகற்றிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த செயலிகளால் இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீன உளவு அமைப்புகளால் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள், சமூக வலைதளங்களில் அதிகளவில் கண்காணிக்கப்படுவதால் இந்திய ராணுவம் மேற்கண்ட  நடவடிக்கையை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.