புதுடெல்லி: 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்காக நடத்தப்படும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2021ம் ஆண்டு, பிப்ரவரி & மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில், இத்தொடர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டதற்கு அதிக வரவேற்பு கிடைத்திருந்தது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, 16 அணிகள் பங்கேற்கவிருந்த இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான மைதானங்கள்கூட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தன.
போட்டி நடைபெறும் காலம், கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு தள்ளிப் போயிருந்தாலும், கடந்த 2003ம் ஆண்டு ஜனவரி 1 முதல், 2005ம் ஆண்டு டிசம்பர் 31க்குள் பிறந்தவர்கள்தான் பங்கேற்க முடியும் என்ற விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை.
இதனால், 17 வயதைத் தாண்டியவர்களுக்கும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.