டெல்லி:
கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்பான டிசிசிஐ அனுமதி வழங்கி உள்ளது.  இடோலிஸுமாப் மருந்து, தோல் நோய்களில் ஒன்றான சொரியாசிஸை  நோய் குணப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மருந்துகள் தயாரிக்கும் பணியில் 600க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பல நிறுவனங்கள், மனிதர்களிடம் மருந்தை செலுத்தி சோதனையை தொடங்கி உள்ளன.
ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தது. அதற்கு உலக சுகாதார மையம் தடை விதித்துள்ளது. மேலும்,  டெக்ஸாமெத்தசோன், மெதில்பிரட்னிசோலன், பாராசிட்டமால் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் சித்த மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு  இடோலிஸுமாப் (Itolizumab ) மருந்து கொடுக்க  இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி வழங்கி உள்ளது.
இது தொடர்பாக, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகத்தின் தலைவர் மருத்துவர் வி.ஜி.சோமானி வெளியிட்ட அறிவிப்பில் “கொரோனா வைரஸ் நோயாளிகளின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் சோரியாசிஸ் நோய்க்கு வழங்கப்படும் இடோலிஸுமாப் மருந்தை வழங்க பரிந்துரைத்துள்ளோம்.
ஆனால், இந்த மருந்தை, தீவிரமான மற்றும் மிதமான சுவாசக் கோளாறு அறிகுறிகள் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அவசர நேரத்தில் மட்டுமே மருத்துவர்கள் இந்த மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயோகான் நிறுவனம் தயாரிக்கும் இடோலிஸுமாப் மருந்துகள் சந்தையில் ‘அல்ஸுமாப்’ என்ற பெயரில் விற்கப்படுகிறது. இது நீண்டகாலமாகவே சோரியாசிஸ் தோல் நோய் சிகிச்சையில் பயன்படுவதாகும்.