சண்டிகர்: கொரோனா தொற்று காரணமாக மரணித்தவர்கள் குறித்து பேசுவது பயனற்றது, அவர்கள் மீண்டும் வரப்போவதில்லை என ஹரியானா மாநில பாஜக முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மருந்து மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.  ஹரியானா மாநிலத்திலும் தினசரி பாதிப்பு 10ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஆனால், கொரோனா தகவல்களை மறைத்து வருவதாக மாநில பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அரியானாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஐந்து கொரோனா  நோயாளிகள் இறந்தனர், ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் இந்த இறப்புக்கு காரணம் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். நிர்வாகம் இதை மறுத்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில்  சுகாதார வசதிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய  மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார்  ஹிசார்  மாவட்டத்திற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ,  இந்த கடினமான காலங்களில்  நோயை எதிர்த்துப் போராடுவதிலும்,  மக்களுக்கு உதவுவதிலுமே கவனம் செலுத்த வேண்டும் என்றவர், தனது மாநிலத்தில் கோவிட் தொடர்பான இறப்புகள் குறித்த தரவுகளை அரசாங்கம்  மறைக்கிறது என்பது அர்த்தமற்ற குற்றச்சாட்டு என மறுப்பு தெரிவித்தார்.

தற்போது மாநிலம்  எந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறது என்பதை முக்கியம்,  தரவுகளைப் பற்றி விவவாதிக்க  விரும்பவில்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக திங்களன்று ஹிசார் மாவட்டத்தில் நடந்த ஐந்து இறப்புகள் குறித்து குறிப்பிட்டுள்ள அவர், கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பின் வரம்புகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் எவ்வாறு மீள முடியும் என்பதைப் பார்ப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, பரபரப்பை ஏற்படுத்தி, இறந்தவர்களை மீண்டும் கொண்டு வர முடியாது. இறப்புகளின் எண்ணிக்கை குறித்து விவாதிப்பதில்  எந்த அர்த்தமும் இல்லை.

இந்த தொற்றுநோய்க்கு உங்களையும் தெரியாது, எங்களையும் தெரியாது, இந்த காலக்கட்டத்தில், உங்களுடைய, என்னுடையது மற்றும் நோயாளிகள் உள்பட  அனைவரின் ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவை. ”

“நாங்கள் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற முயற்சிப்போம். இறப்புகள் குறைவானவை அல்லது அதற்கு மேற்பட்டவை என்று சொல்வது பயனற்றது. அர்த்தமுள்ள விஷயம் என்னவென்றால், நம் அமைப்புகளை சரிசெய்ய முடியுமா என்று கேட்பதுதான். இதைத்தான் நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.