பாட்னா:

நிர்பயா பாலியல் கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் (ஜனவரி)  22ந்தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு, 23-வயதான மருத்துவக் கல்லூரி மாணவி டெல்லியில் இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்திலிருந்து கீழே  தூக்கி வீசப்பட்டார்.  உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 2012ம் ஆண்டு  டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிகழ்வு நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த படுபாதகமான செயலைச் செய்த ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி (16வயது குறைவானவர்) உள்பட  6 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர்.

குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங்  2013-ம் ஆண்டு மார்ச் 11ந்தேதி  திகார் சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து, இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மற்ற குற்றவாளிகள்ன முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்தும் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீடு மனுக்களை டெல்லி உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தன. இதையடுத்து, குற்றவாளிகளுக்க விரைவில் தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் குற்றவாளி ஒருவர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவும் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.  அன்று காலை 7 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றவும் உத்தரவிட்டு உள்ளது.