டில்லி:

நாடு முழுவதும் மொபைல் போன்களின் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பிரபல நிறுவனமான ஏர்செல் நிறுவனம், கடனில் தத்தளித்து வருகிறது. இதன் காரணமாக இந்நிறுவனம் விரைவில் மூடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

முகேஷ் அம்பானியின் ஜியோ வருகைக்கு பிறகு இந்திய தொலைத்தொடர்பு துறையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ஜியோவின் அதிரடி ஆபர் காரணமாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவனங்களிடமிருந்து ஜியோவுக்கு தாவினர். இதன் காரணமாக பெரும்பலான தொலை தொடர்பு நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.

ஜியோவுக்கு சமமாக ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் மட்டுமே  தாக்குபிடித்து வரும் நிலையில் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏர்செல்லுக்கு தென்னிந்தியாவில்  அதிகளவிலான வாடிக்கையாளர்கள் உண்டு. இந்நிலையில், தற்போதைய போட்டிய சமாளிக்க முடியாமல் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாகவும், இதன் காரணமாக வர்த்தகத்தை மேலும் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக தனது நிறுவனத்தை திவால் என அறிவிக்க  தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) அமைப்பிடம் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்றால்போல், ஏர்செல் நிறுவனத்தின் உயர்மட்ட குழுவும்  கலைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே பல டெலிகாம் கம்பெனிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஜியோவின் போட்டியை சமாளிக்க  வோடபோன்-ஐடியா இணைந்து ஒரே நிறுவனமாக செயல்பட இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் ஜியோ போல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்டெல் நிறுவனமும், ஜியோவை எதிர்த்து போராட தயாராகி வருகிறது.

ஏற்செல் நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்தகிருஷ்ணன் தமிழகத்தை சேர்ந்தவர். இந்நிலையில், தமிழகத்தில் பெருவாரியான வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்செல் நிறுவனம்,  ஏற்கனவே ஏர்செல் – மேக்சிஸ் பிரச்சினை குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமலும், தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் உள்ளது.

ஏற்கனவே, ஏர்செல் நிறுவனத்தின் 15,500 கோடி ரூபாய் கடனை மறுசீரமைப்புச் செய்ய, நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்களிடம் இருந்து திரும்ப வாங்க ஏர்செல் முயற்சித்து வருகிறது. ஆனால், அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஐபிசி (IBC) சட்டத்தின்படி ஏர்செல்  நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்க இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பல மாநிலங்களில் ஏர்செல் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் தனது சேவையை நிறுத்தவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர்செல் நிறுவனம், தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்மளம் கொடுக்க முடியாத நிலையில் தத்தளித்து வருவதாகவும்,   இதன் காரணமாக அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும், 5 ஆயிரம் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதுபோல டவர் போன்ற ஏர்செல் விரிவாக்க பணிகளில் ஈடுபட்ட பல துணை நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான பணம் கொடுக்க முடியாத நிலையில்  இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அணில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துடன் இணைந்து, ஜியோவை எதிர்கொள்வ தாக ஏர்செல் அறிவித்த நிலையில், இரு தரப்பினருக்கும்  இடையேயான ஒப்பந்தம் நிறைவேற முடியாத நிலைக்கு ஏர்செல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.