சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மக்களை கவரும் வகையில், எடப்பாடி அரசு பல்வேறு சலுகைகள், கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இடைக்கால பட்ஜெட்டில், கடன்சுமை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகஅரசு சலுகைகளை வாரி வழங்கி வருவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சென்னை  தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.எந்த மாநிலத்திலும் கையில் நிதியை வைத்துக் கொண்டு திட்டங்கள் அறிவிப்பது இல்லை.கடன் வாங்குவது வளர்சிக்காக தான். எல்லா மாநிலங்களும் கடன் வாங்கி தான் திட்டங்களை செயல்படுத்துகிறது.

அரசு அறிவிக்க உள்ளதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஸ்டாலின்  பேசுகிறார். உண்மைக்கு புறம்பாக ஸ்டாலின் பேசி வருகிறார். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் திமுக குரல் கொடுக்கவில்லை. தேர்தல் வந்ததும் குரல் கொடுக்க ஆரம்பித்து விடும்.

மின்னணு முறையில் டெண்டர் நடைபெறுவதால் இதில் எப்படி முறைக்கேடு நடைபெறும். ரூ.40,000 கோடிக்கு டெண்டர் என்றால் உடனடியாக முழுத் தொகையும் செலவிட்டு விடுவதில்லை.

பல்வேறு நெருக்கடிகள் சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளேன். சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்திருக்கிறோம்.

புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடனும் தள்ளுபடி; மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது . மக்களின் பல்வேறு கோரிக்கைகளை, அரசு பரிசீலித்து நிறைவேற்றி வருகிறது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ₨12,110 கோடி பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டது.  பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் 75 % வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளுக்கு கொரோனா காலத்தில் ரூ.1000 நிதியுதவி ,பொங்கலுக்கு ரூ.2500 நிதியுதவி அளித்தோம்.  அரசின் அறிவிப்புகளும் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.