சென்னை: டிசம்பர் 20,21,22 தேதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி, பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.  இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 13ந்தேதி முதல் 16ந்தேதி வரையிலான 4 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி மதுரை உள்பட சில தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்து வந்தார். அப்போது, அதிமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.   நான் நாத்திகவாதி அல்ல, பகுத்தறிவுவாதி என்றும்,  மேல்மட்டத்தில் இருந்து தொடரும் ஊழலை ஒழிப்பதே பிரதான நோக்கம் என்று பஞ்ச் டயலாக் பேசி கைதட்டு பெற்றார். எனக்கு வரும் கூட்டத்தை பார்த்து அமைச்சர்கள் தூக்கம் இல்லாமல் உள்ளனர் என்றும் தமிழக அமைச்சர்களை கலாய்த்தார்.  

இந்த நிலையில், அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் குறித்து மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, டிசம்பர் 20,21,22 தேதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.