டிசம்பர் 22ந்தேதி இன்று தமிழகத்தைச் சேர்ந்த கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாள். உலகை தாயகம் நோக்கி திரும்பிப்பார்க்கச் செய்த தமிழனான ராமானுஜம், ஈரோட்டில் பிறந்து இங்கிலாந்தில் கணிதத் துறையில் உச்சம் தொட்டவர். இன்றும் அவரது கணித கோட்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

1887-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர்  கணித மேதை ராமானுஜம்.  ஏழை அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை கும்பகோணம் சீனிவாசன் அய்யங்கார். தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். ராமானுஜனின் தந்தையாரும், தந்தை வழிப்பாட்டனாரும் துணிக்கடைகளில் எழுத்தாளராக பணியாற்றி வந்தனர்.

ராமானுஜம்,  7 வயதில் ஸ்காலர்ஷிப் பணம் பெற்று கும்பகோணத்தில் கல்வி பயின்றார். கணிதம் சம்பந்தப்பட்ட நுாலினை 13 வயதில் இரவல் வாங்கி படித்தது,  அவரது  ஆழ்மனதில் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியதுடன் ஆய்வுகளையும் மேற்கொள்ள வைத்தது.

இளைஞர் பருவத்தில் சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை பார்த்தார். லண்டனில் பிரபல கணித அறிஞர் ஹார்டிக்கு, தன்னுடைய கணித ஆர்வம் பற்றியும், மாணவராக சேர்ந்து பயில்வதற்கான விருப்பத்தையும் கடிதம் மூலம்எழுதினார்.

இந்திய மாணவர் சேர்க்கை அலுவலகம் மூலம், சென்னையில் வேலை பார்த்த ராமானுஜத்தின் அலுவலகத்திற்கு ஹார்டியின் இசைவு கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால், ராமானுஜத்தின் குடும்ப சூழல் பற்றி நன்கு அறிந்த மற்றும் உடன் பணிபுரிந்த நாராயண அய்யர், அவரது வெளிநாடு செல்லும் கனவை தகர்த்தார்.

ராமானுஜம்  சென்னை துறைமுகத்தில் பணியில் இருந்தபோது, சென்னை வந்த தாமஸ் வாக்கர் என்ற பிரிட்டிஷ் அதிகாரியிடம்,  துறைமுகஅதிகாரி, ராமானுஜத்தை பற்றி எடுத்துக்கூறியதால், சென்னை பல்கலை மாதந்தோறும் ராமானுஜத்துக்கு 75 ரூபாய் ஊக்க தொகையோடு கணித ஆராய்ச்சி செய்ய வாய்ப்பும் வழங்கியது.

இதைத்தொடர்ந்து ராமானுஜத்தின் கணித அறிவு மேலும்,  பிரகாசிக்க தொடங்கியது.  இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள அறிஞர்களும், அவரது கணித அறிவை கண்டு வியனர். அவருடன் நட்பை ஏற்படுத்தியதுடன், அவர் லண்டன் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை  அறிஞர் ஹார்டி செய்ததாக கூறப்படுகிறது

1915ல் ராமானுஜம் உருவாக்கிய கோட்பாடு, 1987ல் கணித அறிஞர்களால் தொடர வழி வகை செய்தது. 1917 ம் ஆண்டு இங்கிலாந்து பல்கலை எப்.ஆர்.எஸ்., (FRS) பட்டம் ராமானுஜத்திற்கு வழங்கியது.

டிரினிடி கல்லுாரி ‘பெல்லோஷிப்’ பெற்றும் பெருமையும் சேர்த்தார்.

தனது வாழ்நாளில் ஆறாயிரம் தேற்றங்கள் அடங்கிய நுாலினை எழுதி, அறிஞர்களை வியக்க செய்தவர் இவர். ‘ஜீரோவிற்கும் மதிப்புண்டு’ என கூறியவர்.

சிறிய வயதில் இருந்து தெய்வ பக்தியில் திளைத்தவர். அதனால்தான் லண்டன் செல்ல வாய்ப்பு கிடைத்ததும், தமது குல தெய்வமான நாமக்கல் தாயார் சன்னதி சென்று உத்தரவு பெற்று சென்றார்.

தனது மனைவியோடு வாழ்ந்தாலும் இவருக்கு இருந்த சிந்தனையால், கணித விடைகளை தேடியே வாழ்க்கை முறை அமைந்து விட்டது.

ரோசர்ஸ் என்ற ராமானுஜரின் கணித கண்டுபிடிப்புகள் தொடர்பான நுால் வெளியிட, ஜி.எச். ஹார்டி உதவி செய்தார்.

32 வயதில் காச நோயால் பாதிக்கப்பட்ட ராமானுஜம், ஏப்ரல் 26 1920ல் கும்பகோணத்தில் உயிர் துறந்தார்.

லிட்டில்வுட் என்ற அறிஞர், ”18ம்நுாற்றாண்டை சேர்ந்த ஸ்விட்சர்லாந்தின் எய்லர் மற்றும் 19ம் நுாற்றாண்டின் ஜகோபின் ஒன்று சேர்ந்த உருவம் ராமானுஜம்,” என போற்றியுள்ளார்.

1962ம் ஆண்டு மத்திய அரசு, ராமானுஜத்தின் 75 வது பிறந்த நாளில் அஞ்சல் தலையை வெளியிட ஒரே நாளில் விற்றுத் தீர்ந்ததும், ‘ஜீரோ’விற்கு மதிப்பு அறித்தவரின் பெருமையை சொல்லியது.