சென்னை: தேர்தலுக்கு பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்ந்து வருகிறது. இருந்தாலும் அவ்வப்போது அதிமுக தலைமையை சீண்டி வருகிறது.  தற்போது, தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு,  முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சையை முன்னெடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் பாஜக இடம்பெற்றுள்ள அணிக்கு அதிமுகவே தலைமை என்பதால், அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரமும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக பாஜகவின் 234 சட்டமன்ற தொகுதிகளின் அமைப்பாளர்கள் , பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி , மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

பின்னர் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், மேலிடப்பொறுப்பாளர் சிடி.ரவி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது, சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, முதல்வரை தேசிய ஜனநாயக கூட்டணியே முடிவு செய்யும் என்று  சி.டி.ரவி திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணிதான் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்றவர், எங்கள் கூட்டணி உறுதியான கூட்டணி என்றார். மேலும்,   தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்வர், துணை முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரான பிரதமர் மோடி தான். முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவு எடுப்பார் என்றும், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு  பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்றார்.

பாஜகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விகளுக்கு, அதிமுக தேர்தல் பிரசார கூட்டத்தில்,   அதிமுக எம்.பி.யும், கட்சியின் துணைஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி பதில் தெரிவித்தார்.  அப்போது,  கூட்டணியில் எந்த தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் வந்தாலும் அதிமுகதலைமையில்தான் ஆட்சி. இதில் கூட்டணி ஆட்சி என்பதற்கே பொருள் இல்லை. தேவையும் இல்லை. எனவே கூட்டணி ஆட்சி அமைப்போம், கூட்டணி அமைச்சரவை அமைப்போம் என்று எண்ணத்தோடு எந்த அரசியல் கட்சிகளும் நம்முடன் கூட்டணி வரும்போது இதை சிந்தித்துக்கொள்ளவேண்டும் என கறாக பதில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.