சென்னை:

நாளை தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஒளியின் திருவிழாவான தீபாவளி மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தரும் நாள் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நன்னாளில் தமிழக மக்களுக்கு தனது மனங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும்,  அனைவரது வாழ்விலும் நல்ல ஆரோக்கியமும், வளமும் பெருக வேண்டும் என ஆளுநர் வாழ்த்தியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

தீப ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், எனது இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை அன்னை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இத்தீபாவளி திருநாள், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும், இருள் நீங்கி, ஒளி நிறைந்திடும் நன்னாளாகவும் விளங்குகிறது.

தீபாவளி பண்டிகையன்று, மக்கள் அதிகாலை எண்ணெய்க் குளியல் முடித்து, புத்தாடைகளை அணிந்து, இல்லங்களில் தீபங்களை ஏற்றி, இறைவனை வணங்கி, உற்றார், உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பகிர்ந்து உண்டு, உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.

தித்திக்கும் தீபாவளித் திருநாளில், அனைவரது வாழ்விலும் அமைதி தவழட்டும், இன்பம் நிறையட்டும், நலங்களும், வளங்களும் பெருகட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.