சென்னை:  தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பண்டிகைகாலத்தையொட்டி, அரசு அலுவலகங்களில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, லஞ்சஒழிப்பு காவல்துறையினர், பல அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கடந்த ஒரு மாதத்தில் சுமார் 35  அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்களிடம் இருந்து  கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பணம்   பறிமுதல் செய்துள்ளனர். மேலும், . சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனையின்போது, குறிப்பிட்ட 2  சார்பதிவாளர் அலுவலகங்களில் பலமுறை சோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும், மொத்தம்  13 சார் பதிவாளர் அலுவலகங்கள் சோதனை நடந்ததாக தெரிவித்து உள்ளது.
சென்னையில் நீலாங்கரை, பம்மல், குன்றத்தூர், செங்குன்றம் ஆகிய இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. வில்லிவாக்கத்தில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி நிர்வாக பொறியாளர் அலுவலகம், அடையாறு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் ஆகியவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதுபோல,  வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல அலுவலகத்தில் அதிகபட்சமாக ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் மற்றும்,  வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மண்டல அதிகாரி பன்னீர்செல்வம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 450 பவுன் தங்க நகைகளும் 6½ கிலோ வெள்ளி பொருட்களும் அங்கு சிக்கியது.
தீபாவளியையொட்டி அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை அதிகமாக நடைபெறுவதாக  வந்த புகாரின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.