கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக தீபிகா பெங்களூருவில் தனது பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீபிகாவின் தந்தை பிரகாஷ், தாய் உஜ்ஜால, இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தற்போது நலமாக இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து தீபிகாவோ, ரன்வீரோ தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இன்னும் உறுதி செய்யவில்லை.