தேசிய அடையாள அட்டை தயாரிக்கும் பணி மெத்தனமாக நடப்பதால், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு கல்வி, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவிகளை பெற, மாற்றுத்திறன் சதவீதம் குறிப்பிடப்பட்ட மருத்துவ சான்று, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் மருத்துவர்களிடம் மருத்துவச் சான்றை பெற்று விண்ணப்பிப்பதால் நலத்திட்ட உதவிகளை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கால விரயத்தை குறைக்க தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு அறிவித்தது. 3 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டது. கர்நாடகா, டில்லி, ஒடிசா போன்ற மாநிலங்களில் இப்பணிகள் 60 சதவீதம் முடிவுற்ற நிலையில், தமிழகத்தில் இப்பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருகிறது. தேசிய அடையாள அட்டை கோரி தமிழகம் முழுவதும் 9 லட்சம் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், 2.60 லட்சம் பேருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனால், நலத்திட்ட உதவிகளை விரைந்து பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் பி.சிம்மசந்திரன், “பயனாளிகளின் மாற்றுத்திறன் சதவீதம் அடிப்படையிலேயே அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. இதனால், எந்த திட்டத்துக்கு விண்ணப்பித்தாலும், மாற்றுத்திறன் சதவீதத்துக்கு மருத்துவ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. மருத்துவர்களும் இந்த சான்றி தழை உடனே வழங்குவது இல்லை. பலமுறை அலையவிடுவதால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஒவ்வொரு முறையும் அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து விண்ணப்பித்து உதவிகளைப் பெற மாதக்கணக்கில் ஆகிறது.

ஆனால், தேசிய அடையாள அட்டையில் ஆதார், மருத்துவச் சான்று, பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். எனவே, தேசிய அடையாள அட்டை வழங்கிவிட்டால், திட்டங்களை விரைந்து பெற முடியும்” என்று தெரிவித்தார்.