டில்லி

டில்லி பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஆசாத் சிங் தனது மனைவியுடன் அடிதடி சண்டை இட்டுள்ளார்

டில்லி மாவட்ட பாஜக தலைவராக ஆசாத் சிங் பதவி வகித்து வருகிறார்.  அவருடைய மனைவி சரிதா சவுத்ரி தெற்கு டில்லியின் முன்னாள் மேயர் ஆவார்.  இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.   இருவரும் டில்லி பாஜக அலுவலகத்தில் சந்தித்த போது இருவருக்கும் இடையில் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அந்த தகராற்றின் இடையில் ஆசாத் சிங் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் தனது மனைவியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.  கட்சியின் கண்காணிப்புக் காமிராவில் இந்த நிகழ்வு பதிவாகி உள்ளது.   இந்த விவகாரம் கடும் சர்ச்சையைக் கிளப்பியது.   நேற்று ஆசாத் சிங்கை டில்லி மாநில பாஜக பொதுச் செயலர் ராஜேஷ் பாட்டியா பதவி நீக்கம் செய்துள்ளார்.

டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி இந்த நிகழ்வு குறித்து விசாரிக்க மூத்த தலைவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.   ஆசாத்  சிங் தனது மனைவி தன்னை அடித்ததால் தாம் அவரை அடித்ததாகத் தெரிவித்துள்ளார்.   சரிதா சவுத்ரி இது குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

டில்லி நகர காவல்துறை இது குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.