டில்லி

டில்லியில் கொரோனா தொற்றை நிறுத்த மாநில எல்லைகள் ஒரு வாரத்துக்குச் சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

 இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் டில்லி 3 ஆம் இடத்தில் உள்ளது.  இங்கு சுமார் 19800க்கு மேல் பாதிக்கப்பட்டு சுமார் 470க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.   நான்காம் கட்ட ஊரடங்கின் போது டில்லியில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  அதன் பிறகு தான் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் டில்லியில் வெளி மாநிலங்களில் இருந்து வருவோரால்  அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்பட்டது. அதே வேளையில் டில்லியில் இருந்து வெளி மாநிலம் செல்வோரால் மற்ற மாநிலங்கள் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் கூறப்பட்டது.    இதையொட்டி டில்லியின் எல்லைகளை மூட அரசு முடிவு எடுத்தது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காணொளி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “தொடர்ந்து டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  ஆகவே அரியானா, உத்தரப் பிரதேசம், டில்லி எல்லைகள் ஒரு வாரத்துக்கு மூடப்பட்டு சீல் வைக்கப்படுகிறது.   ஒரு வாரத்துக்குப் பிறகு மீண்டும் திறப்பது குறித்து மக்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளோம்.

டில்லி மக்கள் இது குறித்த தங்கள் கருத்துக்களை 88000 07222 என்னும் வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.  மேலும் delhicm.suggestions@gmail.com என்னும் இ மெயிலுக்கும் கருத்துக்களை அனுப்பலாம்.  இதைத் தவிர 1031 என்னும் எண்ணுக்கு அழைத்து தங்கள் கருத்தைப் பதிவு செய்யலாம். இதற்கான  கெடு வெள்ளிக்கிழமை மாலை 5 மணி ஆகும்.

டில்லிக்குள் வெளி மாநிலங்களைச் சேர்ந்தோர் அதிக அளவில் வந்து மருத்துவ சேவையைப் பெறுவதால் டில்லி மக்களால் போதுமான அளவு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.   டில்லி மக்களுக்கு மட்டும் என்றால் மருத்துவமனைகளில் போதுமான அளவு படுக்கைகள் உள்ளன.

தற்போது மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி  ளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளது.  சலூன் கடைகளைத் திறக்க அனுமதி அளித்த போதிலும் ஸ்பாவுக்கு அனுமதி இல்லை.  மற்ற கடைஅக்ள், இரு சக்கர வாகனம், கார் பயணம் போன்றவற்றுக்குக் கட்டுப்பாடு இல்லை”எனத் தெரிவித்தார்.