டில்லி

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டில்லி அணி ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தை தவற விட்டுள்ளது.

நேற்று டில்லியில் நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் டில்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டில்லி அணி 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் நேற்றைய போட்டியில் ரிஷப் பந்த் அடித்த அதிரடி ரன்களே காரணம் என கிரிக்கெட் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

புள்ளிகள் வரிசை பட்டியலில் டில்லி கேபிடல்ஸ் அணி இந்த வெற்றிமூலம் 14 போட்டிகளில் 9 ஆட்டங்களில் வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. டில்லி அணி கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பின் ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்கிறது. முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.

நேற்று நடந்த போட்டியின் இலக்கான 116 ரன்களை 10 ஓவருக்குள் முடித்திருந்தால் டில்லி கேபிடல்ஸ் அணி, ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்திருக்கும். திடீர் விக்கெட் சரிவு, மந்தமான ஆடுகளம் ஆகிய காரணங்களால் டில்லி அணியால் 2-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

இன்று நடக்க உள்ள அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி மும்பை அணியை வெற்றி பெற்றால் மட்டுமே டெல்லி அணி தற்போதுள்ள தனது 2-வது இடத்தை தக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.