காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து ஆலோசிக்க அதன் காரிய கமிட்டி கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.


அப்போது டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.
‘’ காந்தி குடும்பத்திலிருந்து தான் அடுத்த காங்கிரஸ் தலைவரை நியமிக்க வேண்டும்’’ என்றும் , ‘’காந்தி குடும்பத்தார் அல்லாதவரை தலைவராக நியமித்தால் காங்கிரஸ் உடைந்து விடும்’ எனவும் விதவிதமான வாசகங்கள் எழுதிய பதாகைகளை பிடித்த படி தொண்டர்கள், நின்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் டெல்லி கண்டோன்மெண்ட் போர்டு காங்கிரஸ் கவுன்சிலரான சந்தீப் தன்வர் என்பவர் , ‘’ ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும்’’ என வலியுறுத்தி தனது ரத்தத்தால் கடிதம் எழுதி சோனியாகாந்திக்கு அனுப்பி இருந்தார்.
’’ராகுல்காந்தி, தனது ரத்தம் மற்றும் வியர்வையை சிந்தி காங்கிரஸ் கட்சியை வளர்த்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்’’ என அந்த ரத்த கடிதத்தில் கவுன்சிலர் சந்தீப் தன்வார் குறிப்பிட்டிருந்தார்.

-பா.பாரதி