டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.

அவர் கடந்த 14ம் தேதி கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனாலும், கடந்த 25ம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட சுவாசத்தில் சிரமம் உண்டானது. இதையடுத்து, லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில், அடுத்தகட்ட சோதனை செய்து பார்த்த போது அவருக்கு டெங்கு காய்ச்சலும் இருப்பது உறுதியானது.

இதையடுத்து மருத்துவர்கள் சிசோடியாவை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந் நிலையில், சிசோடியாவுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று முடிவு வர, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.