டில்லி

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயால ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடான முறையில் அந்நிய நிதியைப் பெற்றுத் தந்த வழக்கில்,முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சிதம்பரத்திற்கு  தொடர்ந்து முன் ஜாமீன் அளித்து வந்த டெல்லி உயர்நீதிமன்றம், அதனை மீண்டும் வழங்க மறுத்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

சிபிஐ தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு சிதம்பரத்திடம்  விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவடைந்த பிறகு அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.   தற்போது 25 நாட்களுக்கு மேலாக சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  அந்த தீர்ப்பில்  ப. சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவருக்கு ஜாமீன் அளிக்க முடியாது எனக் கூறி நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.