டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நிலை மோசமடைந்து உள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி மாநில சுகாதார அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்போது அவரது உடல்நிலை குறித்த விவரங்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை வெள்ளிக்கிழமை மோசமடைந்தது, அவருக்கு ஆக்ஸிஜன் தரப்பட்டு வருகிறது என்று டெல்லி சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

ஜெயினின் நுரையீரல் தொற்று மோசமடைந்துள்ளது, அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன்  மூலம் சுவாசம் தரப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயினுக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவரது ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டதாகவும், பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டதாகவும் ஒரு அதிகாரி கூறினார்.