டெல்லி: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரிய ப. சிதம்பரத்தின் மனு மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில், ப. சிதம்பரம் சிபிஐயால் ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரம் தொடர்ந்து தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து வருகிறது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சிபிஐ வழக்கில் ஜாமின் பெற்றாலும் அமலாக்கத்துறையினரின் பிடியில் சிதம்பரம் தற்போது சிறையில் உள்ளார்.

இந் நிலையில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.