மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 148 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதனடிப்படையில், களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பிரித்விஷா மற்றும் ஷிகர் தவான் ஒற்றை இலக்க ரன்களில் ஏமாற்றினர். ரஹானேவும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

கேப்டன் ரிஷப் பன்ட் மட்டுமே 32 பந்துகளில் 51 ரன்களை அடித்து அணியை சிறிது கரைசேர்த்தார். அதேசமயம், பின்வரிசை பேட்ஸ்மென்கள் சற்று கைகொடுத்தனர். லலித் யாதவ் 20 ரன்களும், டாம் கர்ரன் 21 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 15 ரன்களும் அடிக்க, 20 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்தது டெல்லி அணி.

ராஜஸ்தான் சார்பில், ஜெய்தேவ் 3 விக்கெட்டுகளும், முஸ்தபிஸுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

டெல்லி அணி எளிதான இலக்கைதான் நிர்ணயித்துள்ளது என்றபோதும், நடப்பு ஐபிஎல் தொடரின் சூழலைப் பார்க்கையில், அந்த எளிய இலக்கை ராஜஸ்தான் எட்டுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.