டெல்லி: ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பில் உள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகை வரை கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது.
தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த நபர் டெல்லியிலிருந்து சிறப்பு ரயிலில் பயணிகளை அனுப்பி வைத்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகையால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்று எதிரொலியாக டெல்லி தமிழ்நாடு இல்லமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்குக் கிருமி நாசினி தெளித்துச் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.