டில்லி

டில்லி மாநில அரசுக்கு மத்திய அரசின் நிதி உதவி குறைக்கப்பட்ட போதிலும் கடந்த 5 வருடங்களாகத் தொடர்ந்து வருமானம் அதிகரித்து வருகிறது

டில்லி மாநிலத்துக்கு மத்திய அரசு அளித்து வரும் நிதி உதவி குறைக்கப்பட்டுள்ளது.   கடந்த நிதியாண்டான 2017-18 ஆம் வருடம் மத்திய அரசின் நிதி உதவி ரு.2825 கோடியில் இருந்து ரூ.2184 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.   இதில் யூனியன் பிரதேச அந்தஸ்துக்காக மத்திய அரசு தரும் மானியம் மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு ஆகியவையும் அடங்கும்.    இதைத தவிர தற்போது வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு வெகு நாட்களாக நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் டில்லி மாநில வருமானம் குறித்து மத்திய கணக்கு தணிக்கை அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்னத 5 ஆண்டுகளாக டில்லி மாநில வருமானம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாகக் கடந்த 2017-18 நிதியாண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட மாநில வருமானம் 12.58 % அதிகரித்துள்ளது.   இதில் வரி வருமானம் 14.7% மற்றும் வரி இல்லாத வருமானம் 101.05% அதிகரித்துள்ளது.

இதனால் மாநில அரசுக்கு உபரி வருமானம் வந்துள்ளது  அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி கணக்கின்படி வங்கிகள் உள்ளிட பல நிறுவனங்களில் டில்லி அரசு ரூ.19,173 கோடி வரை முதலீடு செய்துள்ளது.   அரசு வாங்கி உள்ள கடனுக்கு வட்டியாக அளித்த தொகையை விட முதலீடு மூலம் 0.08% அதிக அளவில் நிதி கிடைத்துள்ளது.