சென்னை: ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகளை விடுவிக்க கோருவது தமிழர் பண்பாடு ஆகாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்திகொலை வழக்கு கைதிகள் 28ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் நிலையில், அவர்களை விடுவிக்க வேண்டும் என திமுக, அதிமுக உள்பட அரசியல் கட்சிகள் தமிழகஅரசையும், கவர்னரையும் வலியுறுத்தி வருகின்றன.  இந்த விஷயத்தில் கவனர் விரைந்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும் கவர்னருக்கு அறிவுரை கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ராஜீவ்கொலை கைதிகள் விடுவிப்பு கோஷம் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும்.
7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல.
பெருமதிப்பிற்குரிய அப்துல் கலாம், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தோழர் ஜீவானந்தம், கணிதமேதை ராமானுஜம் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது.
கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும்.
எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.