லக்னோ
உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் ஜனநாயகத்துக்கு பாஜக வால் கடும் ஆபத்து உண்டாகி இருப்பதாக கூறி உள்ளார்.
உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ். இவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஆவார். சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்த சமாஜ்வாதி கட்சி உ.பி. இடைத்தேர்தல்களில் வெற்றி வாகை சூடியது. அந்த வெற்றி பாஜகவை பெரிதும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. சமாஜ்வாதி கட்சியின் லக்னோ தலைமை அலுவலகத்தில் நேற்று அகிலேஷ் யாதவ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அகிலேஷ் யாதவ், “பாஜக சமுதாயத்துக்கு மிகவும் அபாயகரமானது. சமுதாயத்தில் மத அடிப்படையில் பிளவை உண்டாக்க சதித் திட்டம் தீட்டுகிறது. ஜனநாயகத்துக்கு ஆபத்தை உண்டாக்க எண்ணுகிறது. வளர்ச்சி திட்டங்களை தங்கள் அரசு சரிவர செய்யாததை மக்கள் கவனத்தில் இருந்து திசை திருப்பவே இந்த நடவடிக்கைகளை பாஜக செய்து வருகிறது.
இந்த பாஜக ஆட்சியில் நாட்டில் விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். வேலை வாய்ப்பின்றி இளைஞர்கள் அலைகின்றனர். வணிகர்களும் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலை மாற அனைத்து எதிர்கட்ட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் காவி கட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
ஏற்கனவே சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடியது. அதனால் பாஜக அரசு ஆட்டம் கண்டுள்ளது. அந்த தோல்வி பயத்தில் என்ன பேசுகிறோம் எனப் புர்யாமல் உளறுகின்றனர். அதனால் இப்போது தங்களின் அரசியல் எதிரிகளை விலங்குடன் ஒப்பிட ஆரம்பித்துள்ளனர்.” என பேசி உள்ளர்.