நெல்லை:

திருநெல்வேலி மாவட்டம்  சங்கரன்கோவில் அருகேயுள்ள நவநீதிகிருஷ்ணபுரத்தில் டெங்கு காய்ச்சல் பீதியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நவநீதிகிருஷ்ணபுரத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு  அபிஷாலினி என்பவர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். தொடர்ந்து பூசைத்தாய் என்பவரும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்.

இவர்கள் தவிர  மாணவர் முகேஷ்குமார், நத்தினி, ரம்யா, சஞ்சய் உள்ளிட்ட 8 பேரும், சங்கரன்கோவில் என்ஜிஓ காலனியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடையநல்லூருக்கு அடுத்தப்படியாக சங்கரன்கோவிலில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் பீதியில் இருக்கிறார்கள்.