ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலம் சிம்டெகா மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்தார். இவரது குடும்ப ரேசன் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத காரணத்தாரல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் உணவு கிடைக்காமல் சிறுமி இறந்ததாக உணவு உரிமை பிரச்சார ஆர்வலர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.

துர்கா பூஜை விடுமுறை தினங்களில் பள்ளியில் மதிய உணவும் கிடைக்காமல் சந்தோஷி குமாரி என்ற அந்த சிறுமி பசியால் 8 நாட்களாக அவதிப்பட்டுள்ளார். கரிமதி என்ற அந்த கிராமத்தில் மிக ஏழ்மையான சிறுமியின் குடும்பத்துக்கு சொந்தமாக நிலம் கிடையாது. வேலை இல்லாததால் நிலையான வருமானம் இன்றி கஷ்டப்படும் நிலையில் அவர்கள் இருந்துள்ளனர்.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டப்படி ரேசன் பொருட்கள் வாங்க இந்த குடும்பம் தகுதி பெற்றுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இவர்களின் குடும்பத்துக்கு ரேசன் பொருட்களை வழங்க அந்த பகுதி டீலர் மறுத்து வந்ததாக உள்ளூர் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆதார் எண்ணுடன் ரேசன் கார்டு இணைக்காத காரணத்தால் பொருட்கள் வழங்க மறுத்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி முதல் மத்திய அரசு ஆதார் கட்டாயம் என்று அறிவித்துள்ளது. அரசு மானியம் பெற அத்தியாவசியம் என்ற நிலை உருவாகிவிட்டது. இதில் பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் உணவு பொருட்களும் அடங்கியள்ளது.

ராஜஸ்தான், ஜார்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆதார் இணைக்கபடாத ரேசன் கார்டுகளுக்கு உணவு பொருள் வழங்க தகுதியான நபர்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்படுவது குறித்து பல முறை செய்திகள் வெளியாகியுள்ளது.

அரசு மானியங்களை பெற ஆதார் கட்டாயமாக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இதை பொருட்படுத்தாமல் ஜார்கண்ட் அரசு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தி வருகிறது. லேட்கர் மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி மாவட்ட வழங்கல் அலுவலரே இது தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் பொது விநியோக திட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த உத்தரவு காரணமாக தகுதியுள்ள மக்கள் அதிகம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தான் சந்தோஷிகுமாரி இறந்தார் என்று தீரஜ்குமார் தெரிவித்தார். ரேசன் கார்டு நீக்கப்பட்டிருப்பதை ஜால்டேகா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்துள்ளார். கரிமதி கிராமத்தில் சந்தோஷி குமாரி குடும்பம் உள்பட 10 பேரது ரேசன் கார்டு இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ரேசன் கார்டு நீக்கம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21ம் «தி கலெக்டர் நடத்திய குறைதீர் கூட்டத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதோடு செப்டம்பர் 1ம் தேதி மாவட்ட வழங்கல் அலுவலருக்கும் புகார் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய ரேசன் கார்டு கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் புதிய ரேசன் கார்டு வழங்கப்படவில்லை. ஆன்லைன் போர்டல் சரியாக வேலை செய்யாத காரணத்தால் புதிய கார்டு வழங்க இயலவில்லை என்று அதிகாரிகள் காரணம் தெரிவித்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் பரவலாக இதேபோன்ற நிலை நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்டர்நெட் பிரச்னை காரணமாக ஆதார் எண் வைத்திருப்பவர்களை ரேசன் கார்டுடன் இணைக்க முடியாத நிலையும் நீடிக்கிறது. இதனால், உண்மையான பயனாளிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 2.3 கோடி மக்கள் பொது விநியோக திட்டத்தில் உள்ளனர். ஆனால் அரசு இணையளத்தில் 1.7 கோடி மக்கள் என்று மட்டுமே உள்ளது. ஆதார் எண் இணைத்தவர்களின் பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ளனர். குறைந்தபட்சம் 25 சதவீத மக்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.