சென்னை: முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் நீதிபதி கர்ணன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் நீதிபதி கர்ணனை நேரடியாக விசாரணைக்கு அழைத்து, விசாரணை நடத்தப்பட்டதாகவும் இனிமேல் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன் என்று அவர் உறுதி அளித்துள்ளார். அதனால் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
தமிழக காவல்துறையின் நடவடிக்கைக்கு  அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் கர்ணணை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். இது குறித்து தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7 ம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இன்று நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.