தமிழக கோவில்களில்  ஆய்வு செய்த  யுனெஸ்கோ குழு, சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய கட்டடங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை அறிந்து, அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

தமிழக கோவில்களில், ஆகம விதிகளுக்கு புறம்பாக நடந்துள்ள முறைகேடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.  ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான, யுனெஸ்கோ குழுவினர் கோயில்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்றம்  பரிந்துரை செய்தது.

இதையடுத்து யுனெஸ்கோ குழுவினர், இரு கட்டங்களாக, கோவில்களில் ஆய்வு நடத்தினர். காஞ்சிபுரம் கோவில்களில், நேற்று ஆய்வு செய்தனர். பிறகு,  அறநிலையத் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள், சிற்பிகள், புகார்தாரர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்தனர்.

புகழ்பெற்ற பாரம்பரிய கோவில்களில் பல சிற்பங்கள், கோபுரங்கள் மற்றும் கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை கண்ட, குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

குழுவினர் இரு கட்டமாக நடத்திய ஆய்வின் அறிக்கையை, விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.