புதுடெல்லி:

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 4-ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. நாடு முழுவதும் கொரோனா காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூன் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் பற்றிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசியப் பணிகள் தவிர்த்த அனைத்து நடவடிக்கைகளும் முற்றிலுமாக முடக்கப்படுகின்றன. இதுதொடர்பான, உத்தரவுகளை அந்த மாநில அரசு அமைப்புகள் பிறப்பித்துக் கொள்ளலாம்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிற பகுதிகளில் படிப்படியாகத் தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கல்வி நிறுவனங்கள் பற்றி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும். மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள், நிறுவன அளவில் பெற்றோர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்ளுடன் ஆலோசனை நடத்தலாம். இதன்மூலம் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவது பற்றி ஜூலை மாதம் முடிவெடுக்கப்படும்.

மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள்/துறைகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு சமூக இடைவெளி கடைப்பிடிப்பது உள்பட பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை உள்துறை அமைச்சகம் தயாரிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.