அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில்

மூலவர் தயாநிதீஸ்வரர்
தல விருட்சம் :தென்னை மரம்

பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு.
ஊர் வடகுரங்காடுதுறை
மாவட்டம் தஞ்சாவூர்
தலவரலாறு
வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறையாகும். வாலிக்கு ஒரு முறை வால் அறுந்துபோனது. வாலியைக்கண்டு ராவணனே நடுங்கியிருக்கிறான். அவனை வாலால் அடிக்கும்போது வால் அறுபட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தனது வால் வளர அவன் சிவபெருமானை வணங்கினான்.
குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவபெருமானை வணங்கியதால் வாலிக்கு வால் மீண்டும் வளர்ந்தது. அத்தகைய செயல் நடைபெற்றமையால் சிவபெருமான்#தயாநிதீஸ்வரர்   என அழைக்கப்படுகிறார். அம்பாள்   #ஜடாமகுடநாயகி. இத்தலத்தில் சிவபெருமான், சிட்டுக்குருவி ஒன்றிற்கும் மோட்சம் அளித்துள்ளார். எனவே இவர் சிட்டி லிங்கேஸ்வரர்  என்றும் அழைக்கப்படுகிறார்.  இவர் தயாநிதி என்ற பெயருக்கு ஏற்ப கருணை மழை பொழிந்துள்ளார்.
ஒரு சமயம் செட்டிப்பெண் எனப்படும் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோவில் வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்பகுதியைச் சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் தாகத்தால் இறந்துவிடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது.
அவள் தன் உயிர் போகும் தருணத்தில் அங்கிருந்த சிவலிங்கத்தை நோக்கி வணங்கினாள். சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரைப் பறித்துக்கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். ஆகையால் இறைவனுக்கு  குலைவணங்கிநாதர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
தலபெருமை
இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 49 வது தேவாரத்தலம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்
இத்தலக் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தியைத் தரிசித்தால் குருபலம் பெருகும் . நேர்த்திக்கடனாக அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்குப் பொருளுதவி செய்தும் நிறைவேற்றலாம்.
திருவிழா
பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. கார்த்திகையில் அம்பிகையைப் பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.