அறிவோம் தாவரங்களை – நாயுருவி

நாயுருவி (Achyranthes aspera)

பாரதம் உன் தாயகம்!

தரிசு நிலங்கள், சாலையோரங்கள், ஈரப் பகுதிகளில் முளைத்திருக்கும் இனிய செடி நீ!

நெல் கதிர் போல் இருப்பதால் நீ கதிரி என அழைக்கப்படுகிறாய்!

உன் வேர் பாறைக் கற்களைத் துளைத்துச் செல்வதால் நீ ‘கல்லுருவி’ஆனாய்!

செந்நாயுருவி, பட உருக்கி என இருவகைப் பெயர்களில் விளங்கும் இனிய செடி நீ!

அபர்மார்க்கி, நாய்க்குருவி, சரமஞ்சரி, சனம், சிறு கடலாடி, சுவானம், சேகரி, மாமுனி எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் ஒரு பொருள் குறித்த பல சொல் கிளவி நீ!

ஒரு மீட்டர் வரை உயரம் வளரும் உன்னதச் செடி நீ!

கழிச்சல், காய்ச்சல், வியர்வை, வெள்ளைப்படுதல், வீக்கம், காமாலை, இருமல், தலை நோய்கள், மலச்சிக்கல், தோல் நோய், தோல் அரிப்பு, தேள் கடி, காதுவலி, பல்வலி, சிறுநீர் அடைப்பு, நரம்பு வலிமை, கருக்கலைப்பு, கருப்பைச் சுருக்கம், காது சீழ் , ஆறாத புண்கள், மூலநோய், சுகப்பிரசவம் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மூலிகை நிவாரணி நீ!

இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் இனிய செடி நீ!

பொடி, கசாயம், சாறு, தைலம் எனப் பல வகையில் பயன்படும் நல்வகைச் செடி நீ!

தலைகீழ் முட்டை வடிவ இலை செடியே!

கால்நடைகளின் மேல் ஒட்டிச்சென்று இனப்பெருக்கம் செய்யும் நெற்றுச்செடியே!

பூண்டு வகைத் தாவரமே! கைப்பு, துவர்ப்புச்சுவைக் கொண்ட நறும்பூ செடியே!

பட்டையான தண்டு பெற்ற பசுமைச் செடியே!

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அரிய செடியே!

சித்தர்கள் கண்ட தெய்வீக மூலிகைச் செடியே!

சர்வ வசியமும் செய்யப் பயன்படும் அபூர்வச் செடியே!

கண்ணாடியைக் கத்தரிக்கும் வலிய இலை செடி நீ!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க!உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி

📱9443405050.