அஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல் –  இறுதி மற்றும் மூன்றாம் பகுதி

இன்று அஷ்ட லட்சுமிகளில் மீதமுள்ளோர் பற்றிக் காண்போம்
 
சந்தான லட்சுமி

சந்தானம் என்ற குழந்தை வரத்தை அளிப்பதனால் சந்தான லட்சுமி என்பது திருப்பெயர். இத்திருக்கோயிலில் சடையுடன் கிரீடத்தைத் தரித்தபடி வரத அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களை அணிந்து காட்சி தருகிறாள். இவள் பீடத்தில் அமர்ந்திருக்கக் கன்னிப் பெண்கள் சாமரம் வீசியும் விளக்கினைக் கையில் ஏந்திய வண்ணமும் நின்றுகொண்டிருக்கின்றனர். திருமண மற்றும் சந்தான பாக்கியம் அளிப்பவள். பித்ரு தோஷத்தை நீக்குபவள்.
 
விஜய லட்சுமி

வெற்றியை அருளுபவள் விஜயலட்சுமி. எடுத்த காரியம் யாவினும் வெற்றியைத் தரும் விஜய லட்சுமிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு. கோயிலில் மேற்கு முகமாக அன்னப் பறவையின் மீது வீற்றிருக்கிறாள் விஜய லட்சுமி. இவள் அனைத்து வெற்றிகளையும் மங்களத்தோடு அளிக்கும் சர்வ மங்களை என்னும் நாமம் பெற்ற நாராயணி. தொழிலில் வெற்றி பெற விஜய லட்சுமிக்குப் புத்தாடை அணிவித்துக் குங்கும அர்ச்சனை செய்யலாம்.
 
வித்யா லட்சுமி

 
கல்விச் செல்வத்தை வழங்குவதால் இவளுக்கு வித்யா லட்சுமி என்று பெயர். சரஸ்வதியை வித்யா லட்சுமி ரூபமாகப் பாவித்து வழிபடுகின்றனர். தரைத் தளத்தில் பக்தர்கள் வல்வினை போக்கி வாழ வைக்க வடக்கு நோக்கிக் குதிரை வாகனத்துடன் கூடிய தாமரைப் பீடத்தில் வீற்றிருக்கிறாள். கல்வி, வித்தைகளில் சிறக்க, வித்யா லட்சுமிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்திக்கலாம்.
 
 
தன லட்சுமி

 
தனம் என்ற செல்வ வளத்தை அளிப்பவள் தன லட்சுமி. தன லட்சுமியின் அருள் கிடைத்தால் செல்வங்கள் குவிகின்றன என்று நிகமாந்த தேசிகன் கூறுகிறார். தன லட்சுமி இத்திருக்கோயிலின் இரண்டாவது தளத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்த வண்ணத்தில் அருள் பாலிப்பவள். வறுமை போக்கும் தன்மை கொண்டவள்.
 
இத்துடன் அஷ்ட லட்சுமிகள் விவரம் முடிந்தது.