அறிவோம் தாவரங்களை – எருக்கன்

எருக்கன். (Calotropis Procera)

ஆதிமனிதன் பிறந்தபோதே பூமிதன்னில் தோன்றிய சாமிச்செடி நீ!

6 அடி வரை உயரம் வளரும் தேவ விருட்சம்!

வெள்ளெருக்கன், நீல எருக்கன் என இருவகையில் பூத்துக் கிடக்கும் புனிதச்செடி!

அம்மையப்பனின் நீலப்பூச்செடி!

பிள்ளையார்  அணியும் வெள்ளைப்பூச்செடி நீ!

உன்னை வீட்டில் வளர்த்தால் ஓமல், திருஷ்டி எல்லாம்  ஓட்டம் பிடிக்குமாம், கெட்ட ஆவிகள் விட்டு விலகுமாம்!

உன் வேரை முன்வாசல் அறுகால் ஆணியில் மாட்டி வைத்தால் வீடு விளக்கமுறுமாம்!

உன் வெள்ளெருக்கம்பிள்ளையார் விபத்தைத் தடுக்கும் வாகனக் கடவுள்!

சித்த மருத்துவத்தின் சிறந்த மூலப்பொருள் நீ!சங்க இலக்கியத்தில் இடம்பெறும் புதுமைப் பூ!

புதையல், சிலைகள், இரத்தினம் இவை புதைந்து இருக்கும் இடத்தில்  நீ முளைப்பாய்  என விருட்ச நூல்கள் விளம்புகின்றனவே!

காலில் குத்திய முள்ளைக் களைய எருக்கம்பால் தரும் இலை மருந்து நீ!

காது நோய்க்கும் குட்ட நோய்க்கும் ஏதுவான தேவ மூலிகை!

காக்கா வலிப்பு, பல்வலிகளுக்குத் தக்க மூலிகைச் சாறு நீ!

வயிற்றுப்புழுக்களுக்கும் வாய்த்த நல் மருந்து!

எலிக்கடி, தேள் கடி, பாம்புக் கடிகளுக்கு ஏற்ற பத்திய சாந்து நீ!

வெப்ப மண்டலத்தில் சாம்பல் செடியே!

குப்பையில் கிடக்கும் கற்பகக் கொடியே!

தரிசு நிலத்தில் பரிசுப் பொருளே!

நீவிர் அறமும் அருளும் உள்ளவரை அழகாய் இனிதாய் வளர்க!வாழ்க!உயர்க!

நன்றி : பேரா.முனைவர் ச.தியாகராஜன்(VST),

 நெய்வேலி.

☎️9443405050.