திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கருவிலி சிவன்கோவில்

கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடுத்துள்ளது கருவிலி

இறைவன் -சற்குணநாதேசுவரர்
இறைவி-சர்வாங்க நாயகி,
தீர்த்தம் : எம தீர்த்தம்,

இக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வங்களை வணங்கும் பேறு பெற்றவர்கள் இனி எந்த ஒரு கருவிலும் பிறக்கவேண்டிய தேவை இல்லை என்கின்றனர், அதனால் பிறப்பை அறுத்து மோட்சத்தை அருளும் தலம் என்பதால் இந்தத்தலத்தைக் கருவிலி என்பார்கள்.

தட்சனின் யாக நிகழ்வின் போது நடந்த கோர நிகழ்வால் தாட்சாயிணியை இழந்த ஈசன் பித்தனாக ஊர் ஊராக சுற்றித்திரிந்து இறுதியில் அமர்ந்த இடம் கருவிலி என புராணம் கூறுகிறது.

அப்போது ஈசனுடன் சேர்வதற்கு அன்னை பார்வதி அழகே உருவாக மிண்டும் தோன்றிய இடம் கருவிலி ஆலயத்தில் இருந்து அரை கீ மீ தொலைவில் இருக்கும் அம்பாச்சிபுரம் என்று சொல்கிறது புராணம். இறைவனுடன் சேர அம்மை தங்கி அர்ச்சித்த இடமே அம்பாச்சிபுரம் ஆகியிருக்கிறது.

முப்புரமும் எரித்த ஈசன் ஆனந்தக் களிப்பில் கொடுகொட்டி என்ற ஆட்டத்தை இத்தலத்தில் நிகழ்த்தினார் எனவே இக்கோவில் கொட்டிடை என்று அழைக்கப்படுகிறது.

கிழக்கு நோக்கிவிற்றிருக்கும் சர்வாங்கசுந்தரியின் அழகை வர்ணிக்க வார்தைகள் இல்லை. அதி அற்புதமாக விளங்குகிறாள். ஈசனுடன் இணைந்த தலமாதலால் திருமணத்தடை நீக்கும் பரிகாரத்தலமாக விளங்குகிறது. திருக்கடையூரில் மார்க்கண்டேயனுக்குப் பாசக் கயிற்றை வீச, சிவபெருமான் குறுக்கிட்டுத் தடுத்தார். இதனால் பயந்த எமதர்மனை கருவிலி வந்து நீராடி தன்னை வணங்குமாறு ஈஸ்வரன் பணித்தார். எனவே எமன் இங்கு வந்து நீராடி வணங்கி தன் பாவம் நீங்கப்பெற்றான். இக்குளத்து நீரில் நீராடினாலும் தலையில் தெளித்து கொண்டாலும் எமபயம் போகும்.

கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜ கோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் கருவறை ஒரு முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் கணபதி பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறை வெளிப்பிரகாரச் சுவர் மாடங்களில் கோஷ்ட மூர்த்தங்களாக அமைந்துள்ள நர்த்தன விநாயகர், அர்த்த நாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை. கருவறை முன் மண்டபத்தில் நடராஜர், ஆஞ்சனேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் இறைவன் சற்குண நாதேஸ்வரர் என்ற பெயருடன் லிங்க வடிவில் அருட்காட்சி தருகிறார்.

அம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் ரகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். அண்ணலின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே, பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த அம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம்.

இங்கு அம்பிகையை தரிசித்த இளம்பெண்களுக்கு கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இக்கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சந்நிதி இல்லை. இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.

சற்குணன் என்ற மன்னன் இக்கோயிலில் வழிபட்டு குறைகள் நீங்கப்பெற்று மோட்சமும் பெற்றார். சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்குணேஸ்வரபுரம் என்றும் இத் தலத்திற்கு பெயர் உண்டு. இந்திரனும் தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.

இரண்டாம் ராஜராஜன் கல்வெட்டுக்கள் உள்ளன, தட்சணாமூர்த்தி சிலை அழகாகவும் காலடியில் சில விலங்குகளும், முனிவர் சிலைகளும் உள்ளன. வடகிழக்கு மூலையில் குலோத்துங்க சோழனின் சிலை உள்ளது அனுமனின் வெண்பளிங்கு சிலை ஆறு அடி உயரத்தில் உள்ளது. அம்பிகையும் வடபுறத்தில் கிழக்கு நோக்கி தனி ஆலயத்தில் உள்ளார்.