ரத சப்தமி  ( 19-02-2021)

🎀 உலகத்துக்கே ஒளி வழங்கும் சூரியனை,  விஷ்ணுவின் அம்சமாய் கொண்டு சூரிய நாராயணன் என்று சொல்வார்கள்.

🌷 சூரியன், எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனின் வலது கண்ணாக இருப்பதாக தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன.🌷

👉🏽 சூரிய சக்தியால் தான் பயிர்கள் வளர்கின்றன. ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன. கோடை, மழை, குளிர் உள்ளிட்ட பருவநிலைகள் சூரியனைச் சுற்றியே அமைகின்றன.

🍄 எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார். மேலும் ஆயிரம் கிரணங்களோடு ஒளி மண்டலத்தில் உலாவரும் உயர்வையும் அடைந்தார். இதனால் இருளை அழிக்கவும், ஒளியை உண்டாக்கவும், வெப்பத்தைத் தரக்கூடிய வல்லமையையும் பெற்றார்.

💧 காசியப முனிவருக்கும், அவரது மனைவி அதிதி என்பவருக்கும் விவஸ்வான் முதலான 12 சூரியர்கள் பிறந்தனர். அதிதி அன்னையின் புத்திரர்களானதால், பன்னிரு சூரியர்களையும் ‘ஆதித்யர்’ என்பார்கள்.

🌿 சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார்.

🌵 அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் சமயமே மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்குப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

🌻 சித்திரை மாதப்பிறப்பை சித்திரை விஷு என்றும்,  ஐப்பசி மாதப்பிறப்பை துலாவிஷு என்றும் கூறுவர். சூரியன் ஒருவராக இருந்தாலும் 12 ராசிகளில் சஞ்சரிப்பதால் பன்னிரு சூரியர்களாகக் கொள்ளப்படுகிறார்.

♻ சூரியன் ஏறிவரும் தேருக்கு ஒரு சக்கரம் உண்டு. அந்த தேரில் பச்சை வண்ணமுடைய ஏழு குதிரைகள் பூட்டப்பட்டு இழுக்கின்றன. இந்தக் குதிரைகளை ஓட்டுகிற ரத சாரதி அருணன். இவர் காலில்லாதவர். சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த ரதத்துக்கு ஐந்து ஆரங்களும், மூன்று நாபிகளும் உண்டு. மூன்று நாபிகளும் மூன்று காலத்தைக் குறிக்கும். சூரிய சக்கரத்தில் உள்ள ஆறு கட்டைகளும் ஆறு ருதுக்களை குறிக்கின்றன.

🌸 சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம், தட்சிணாயனத்தைக் குறிக்கின்றன. சூரியன் நான்கு பட்டணங்களையும் சுற்றிவந்து உதயம், மத்தியானம் அஸ்தமனம், அர்த்த ராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார்.

⛱ சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி.⛱

🌞 அவரது பிறந்த தினத்தையே ரத சப்தமியாகக் கொண்டாடுகின்றனர்.🌞

☀ சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மறுபெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை கழிந்து, பவுர்ணமி கழிந்த 7–ம் நாளை ‘சப்தமி திதி’ என்கிறோம்.

🌹 உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில், 7–வது நாள் வரும் சப்தமி திதியே ரத சப்தமி ஆகும். ரத சப்தமியன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று எனப் புராணங்கள் கூறுகிறது. அன்று சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும், ஒரு சேர வடக்கு நோக்கித் திரும்பி பயணத்தைத் தொடங்குகின்றன. அன்று சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. முடியாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.

⛄ ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

👉🏽  ஏழு எருக்கம் இலைகளைக் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

🌿 தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் போன்றவற்றைத் தலையில் வைத்து நீராட வேண்டும்.

🌵 கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது.

🙎🏻 ரத சப்தமி விரதத்தைச் சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்குச் சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரியநாராயணரை சூரிய துதிகளைச் சொல்லி வழிபட வேண்டும்.

👉🏽 அன்று சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை செய்து இரண்டையும் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி ரொட்டி, சாதம் போன்றவற்றைப் பசுமாட்டிற்குக் கொடுப்பது நல்ல பலனைத் தரும்.

⛱ வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம்.

‘ஜபாகுஸுமஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம் ! தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம் !!

–என்ற சூரிய சுலோகத்தை 108 தடவை சொல்லலாம்.

💦 ரதசப்தமியன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மம், தானத்திற்குப் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். சூரியன், நாம் வழங்கும் தானத்தை நம் முன்னோர்களிடம் வழங்குகிறார்.

🅱 சூரியனுக்கு உகந்தவை:🅱

தானியம்     – கோதுமை

மலர்     – செந்தாமரை

வஸ்திரம்     – சிவப்பு ஆடை

ரத்தினம்     – மாணிக்கம்

நிவேதனம்    – கோதுமை சக்கரன்னம்

சமித்து     – வெள்ளெருக்கு

உலோகம்     – செம்பு