ஸ்ரீ உப்பிலியப்பன் கோயில்


ஸ்ரீ பூமாதேவித் தாயார் ஸமேத ஸ்ரீ ஒப்பிலியப்பன் பெருமாள்{ஸ்ரீ திருவிண்ணகரப்பன்} (உற்சவர்- பொன்னப்பன்), திருநாகேஸ்வரம் திவ்யதேசம், தஞ்சாவூர் மாவட்டம்.
உப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் கோவிலாகும்.
இது 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும்.
ஸ்வாமி நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (3481) :-
“என்னப்பன், எனக்காய், இருளாய், என்னைப் பெற்றவளாய், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என் அப்பனுமாய், மின்னப்பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்,
தன் ஒப்பாரில்லப்பன், தந்தனன் தன தாள் நிழலே”.
ஸ்வாமி நம்மாழ்வார் திருவடிகளே சரணம் திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்.
பெயர்க்காரணம் :-
ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.
பூமாதேவியைத் திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு.
உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதைப் பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.
ஸ்தல வரலாறு :-
உப்பிலியப்பன் கோவில் திருநாகேஸ்வரத்திற்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.
மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர்.
இத்தலம் செண்பக வனம், ஆகாச நகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை, பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்.
முற்காலத்தில் மிருகண்டு மகரிஷியின் புத்திரன் மார்க்கண்டேய மகரிஷி பூமாதேவி தனக்கு மகளாகவும் திருமால் மாப்பிள்ளை ஆக வேண்டும் என கடும் தவம் செய்தபோது துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தையைக் கண்டு வியந்து எடுத்து பூமாதேவி எனப் பெயர்சூட்டி வளர்த்தார். திருமண வயதை அடைந்தாள். அவதார நோக்கம் நிறைவேறும் காலம் வந்தது.
திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு மார்க்கண்டேயர் குடிலுக்கு வந்து பூமாதேவியைத் தனக்கு மணம் முடிக்கும்படி கேட்க ஏதேதோ கூறியும் கேட்கவில்லை. மகளுக்கு உப்பு போட்டுச் சமைக்கத் தெரியாது எனக் கூறினார். விடவில்லை திருமால்.
செய்வதறியாது கண்மூடி பெருமானை வேண்டி கண் திறந்தபோது உப்பிலியப்பனே முன் தோன்றி உன்னிடம் வளர்ந்தது பூமாதேவியே என உரைத்து மணம் முடித்தார்.
மார்க்கண்டேயர் விருப்பம் நிறைவேறியது. இன்றும் உப்பில்லாமல் உணவு நெய்வேத்யம் செய்து வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு வருட ஐப்பசி ஸ்ரவண நக்ஷத்ரத்தன்றும் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும்.
இத்திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தைப் பேறு கிட்டும் என நம்பப்படுகிறது, திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார். இங்குச் சென்றாலே திருப்பதி சென்ற பலன் கிட்டும்.