திருவானைக்காவல்
பஞ்சபூத தலங்களில் அப்பு (நீர்) தலமாகவும், சக்தி பீடங்களில் வராகி பீடமாகவும் திகழ்வது திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம். இத்தலம் காவேரி – கொள்ளிடம் நதிகளுக்கிடையே, திருச்சியிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.
அகிலாண்டேஸ்வரி அம்பாளின் தாடங்கத்தால் மகிமைபெற்ற தலம் இது. யானை பூஜித்ததால் யானைக்காவல், கஜாரண்யம், கரிவனம் ஆகிய பெயர்களாலும், அம்பாள், ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால் “உபதேச ஸ்தலம்” என்றும், சம்பு மாதவ முனிவர் வழிபட்டதால் சம்பு வனம், ஜம்புகேஸ்வரம் என்றும் இந்தத் தலம் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீராமபிரான் இங்கு வந்து வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. ராவணனைக் கொன்ற தோஷம் தீர ராமேஸ்வரத்தில் சிவலிங்க பூஜை செய்த ஸ்ரீராமன், கும்பகர்ணனைக் கொன்ற தோஷம் தீரத் திருவானைக்காவல் வந்து, கோயிலின் மேற்குப் பகுதியில் குளம் அமைத்து லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு நிவர்த்திப் பெற்றாராம். இந்த லிங்கத் திருமேனி அமைந்திருக்கும் சந்நிதி ஸ்ரீ கரியமாலீசுவரர் கோயில் எனப்படுகிறது.
மதிய பூஜையின் போது கோயில் அர்ச்சகர் புடவை அணிந்து கோ பூஜையுடன் ஸ்வாமிக்கும் ஆராதனைகள் நடத்துவார். அம்பாளே ஸ்வாமியைப் பூஜிப்பதாக ஐதிகம். இந்த வைபவத்தைத் தரிசித்தால் கல்யாண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.