திருப்பதி:

திருப்பதி லட்டு விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

திருமலை திருப்பதியில் வெங்கடாஜலபதியை வந்து வணங்கிச் செல்லும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. காலம் காலமாக இந்த பிரசாதம் வழங்கப்பட்டு வரும் நிலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் எண்ணிக்கையில் மாற்றத்தை கொண்டு வந்தது.

இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10-க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ. 10-க்கு 2 லட்டுகளும், ரூ.25-க்கு 1 லட்டு என கூடுதலாக வழங்கப்படுகின்றன. இது தவிர்த்து ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

திருப்பதி என்றால் மொட்டை மட்டுமல்லாது லட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் லட்டு விலையை உயர்த்த நிதி துறை திருப்பதி தேவஸ்தானத்துக்கு பரிந்துரை செய்துதுள்ளது. சலுகை விலையில் வழங்கப்படுவதால் லட்டு தயாரிப்பில் ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்ட விலை உயர்வு அவசியம் என்று அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்டு தயார் செய்ய ரூ.37 செலவாகிறது. ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் லட்டு விநியோகத்தை தொடர்ந்து அளிக்க வேண்டும் என்றால் விலை உயர்வு செய்தால் மட்டுமே முடியும் என்று நிதிதுறை பரிந்துரைத்துள்ளது.