டில்லி :

நாடாளுமன்ற தேர்தலில், கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி,  கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 10 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி,  நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி களையும், தொகுதி பங்கிடுகளையும் அறிவித்து வருகின்றன. கர்நாடக மாநிலத்தில், ஏற்கனவே கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், நாடாளுமன்ற தேர்தலில் தொடர்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்  தொகுதிகள்  ஒதுக்கீடு குறித்து  இரு கட்சிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தன. இந்த நிலையில், இன்று இறுதிக்கட்ட  பேச்சு வார்த்தை டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையே நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்டனர்.

பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, 28 லோக்சபா தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.