மும்பை
தேவேந்திர பட்நாவிஸ் மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து ஒரே மாதத்தில் இருமுறை ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் கடந்த 1960 ஆம் வருடம் மே மாதம் ஒன்றாம் தேதி உருவானது. அதன் பிறகு அங்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது. காங்கிரசைச் சேர்ந்த வசந்தராவ் நாயக் 11 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவர் தனது ஆட்சியை முதன் முதலாக முழுமையாக ஐந்து வருடங்கள் நடத்திய முதல்வர் ஆவார். அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.
அவர் 1963 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல்வராகப் பதவி ஏற்றார். அதன் பிறகு அவர் 1972 ஆம் வருடம் மார்ச் 13 வரை தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தார். அதிக நாட்கள் பதவி வகித்து ராஜினாமா செய்தவர் என்னும் பெருமையை நாயக் பெற்றுள்ளார். அதைப்போல் பாஜகவில் முதல் முதல் 5 வருடம் ஆட்சி செய்த முதல்வர் என்னும் பெருமை தேவேந்திர பட்நாவிசுக்கு உண்டு.
மகாராஷ்டிர சட்டப்பேரவை ஆயுள் முடிவடைந்ததால் இந்த மாதம் 8 ஆம் தேதி அன்று தேவேந்திர பட்நாவிஸ் ராஜினாமா செய்தார். அதன் பிறகு இந்த மாதம் 23 ஆம் தேதி மீண்டும் முதல்வர் பதவி ஏற்று நவம்பர் 26 அன்று மீண்டும் ராஜினாமா செய்தார். இதன் மூலம் ஒரே மாதத்தில் இரு முறை ராஜினாமா செய்த முதல்வராக அவர் உள்ளார்.