சபரிமலை
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் 14 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள ஆனி மாத பூஜைக்குப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஆனி மாத பூஜையும் அதன் பிறகு 28 ஆம் தேதி வரை திருவிழாவும் நடக்க இருந்தது. இதையொட்டி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதி வழங்க உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டது.
பக்தர்கள் ஆனலைன் மூலம் அவசியம் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான முன்பதிவு 10 ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனர் இதை நிறுத்தச் சொல்லி அரசுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதையொட்டி முன்பதிவு தொடங்கவில்லை.
நேற்று கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகபள்ளி சுரேந்திரன் தலைமையில் தேவஸ்தான உயரதிகாரிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆனிமாத பூஜைகளுக்கு பக்தர்களை அனுமதிப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 19 முதல் நடக்க இருந்த திருவிழாவைத் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.