புதுடெல்லி: நிதி நெருக்கடியால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்படும் நிலையில் உள்ள சூழலில், நாட்டின் விமானக் கட்டணங்கள் பல்வேறு காரணங்களால் அதிகரித்துள்ளன.

விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் பி.எஸ்.கரோலா கூறியுள்ளதாவது, “சுமார் 40 பிரிவுகளில், கட்டணங்கள் குறித்த விபரங்களை கண்காணித்து வருகிறது விமானப் போக்குவரத்து இயக்குநரகம். அதில், 10 பிரிவுகளில், 10% – 30% வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, கட்டணத்தை நியாயமான அளவில் நிர்ணயிக்குமாறும், அதன்பொருட்டு முன்னுரிமை கொடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானங்களில் குறைந்தது 10 விமானங்கள், இதர விமான நிறுவனங்களின் விமான வரிசைகளில் சேர்க்கப்படும்.

மீண்டும் பெறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்களின் குத்தகைதாரர்களிடம் பல விமான நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. விமான நிறுவனங்களிடம், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து, முடிந்தளவிற்கு குறைந்த கட்டணங்களை நிர்ணயிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

– மதுரை மாயாண்டி