‘பட்டாஸ்’ படம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கர்ணன்’ படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் தனுஷ்.

ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கி, 2020-ம் ஆண்டு பிப்ரவரி வரை திருநெல்வேலியிலேயே ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நடைபெறவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது .

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியிருக்கும் நிலையில் படத்தின் டைட்டிலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் தாணு, அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர். தொடர் படப்பிடிப்பில்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ‘கர்ணன்’ என்ற தலைப்பை மாற்றக் கோரி சிவாஜி சமூகநலப் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன், தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “தங்கள் தயாரிப்பில் ‘கர்ணன்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாவதாகப் படித்தேன். வருத்தம் அளிக்கிறது. நடிகர் திலகத்தின் மகாபாரதக் ‘கர்ணன்’ திரைப்படப் பெயரை மீண்டும் பயன்படுத்துவது சரியல்ல. அதுவும் தங்களின் தயாரிப்பில் என்பது மிகுந்த வருத்தம்.

பெயரில் ஏதாவது இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, நடிகர் திலகம் ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கை. ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சந்திரசேகரன்.