மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூல் மழை பெய்து வருகிறது.

ஏப்ரல் 9-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து திரையரங்கில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது கர்ணன்.

இந்நிலையில், கர்ணன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதாக தனுஷ் அறிவித்துள்ளார். இது குறித்த ட்விட்டர் பதிவில், “கர்ணனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜும் நானும் மீண்டும் ஒரு முறை கைகோர்க்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் நடக்கிறது, அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.