சென்னை: ‘போட்டியை வெல்வது எப்படி’ என்ற வித்தை தோனிக்கு தெரியும் என்பதால், ஐபிஎல் தொடரில், சென்னை அணி அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதி என்று கணித்துள்ளார் முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான ஸ்ரீகாந்த்.

அவர் கூறியதாவது, “சில வீரர்கள் விலகினாலும்கூட, சென்னை இன்னும் சிறந்த அணிதான். எப்படியும் அந்த அணி ‘பிளே ஆஃப்’ சுற்றுக்கு முன்னேறுவது உறுதி. அந்த அணியின் அனுபவம் அப்படியானது.

தோனியின் கேப்டன்சியே அந்த அணியின் மிகப்பெரிய பலம். போட்டியை எப்படி வெல்வது என்ற வித்தை தோனிக்கு அத்துப்படி. ரெய்னாவின் இடத்தை தமிழ்நாட்டின் முரளி விஜய் நிரப்புவார் என்று நம்புகிறேன்.

இது அவருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு. அவர் ஒரு நல்ல வீரர் என்பதை மறக்கலாகாது. பஞ்சாப் அணிக்காக அவர் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்” என்றுள்ளார் ஸ்ரீகாந்த்.