ராஞ்சி: தனது ஓய்வையொட்டி, பிரதமர் மோடி, தனக்கு எழுதிய நீண்ட வாழ்த்துக் கடிதத்திற்கு, பதிலளித்து நன்றி தெரிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி.

முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் தோனி, தனது ஓய்வை அறிவித்ததிலிருந்து அவர் தினசரி செய்தியாகி வருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை கொடுப்பதோடு, அவர் ஓய்வு அறிவித்த விதம் குறித்தும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, யாரும் எதிர்பாராத வகையில், தோனிக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி, தனது பிரியாவிடையைக் கொடுத்தார். இந்தக் கடிதத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அதற்கு நன்றி கூறியுள்ளார் தோனி.

தோனி கூறியுள்ளதாவது, “கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் ஆகியோர் நாடுவது பாராட்டைத்தான்! அவர்களது கடின உழைப்பும் தியாகமும் அனைவராலும் கவனிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். உங்களது நல்வாழ்த்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றி பிரதமர் அவர்களே..!” என்றுள்ளார் தோனி.