சமீபத்தில் துருவ் விக்ரமின் ‘அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக்கான ‘ஆதித்யா வர்மா’ படத்தின் டீஸர் வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 50 நாட்கள் நடைபெற்றது என்றும், முழுக்கவே மகனுடன் விக்ரம் இருந்து பார்த்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் துருவ் விக்ரம் தனது தந்தை விக்ரம் குறித்து நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

” எப்போதும் நான் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென எண்ணியதற்கும் , லட்சியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியதற்கும் , எதிர்காலத்தைப் பற்றி எப்போதும் தெளிவாக இருக்க பழக்கப்படுத்தியதற்கும் , எனக்காக ‘ஆதித்யா வர்மா’வைத் தந்து, உருவாக்கியதற்கும் , எப்போதும் எனக்கு ஆதரவு தந்ததற்கு, உங்களுக்குத் தெரிந்த அத்தனையையும் தொடர்ந்து எனக்குக் கற்றுத் தந்தற்கு…. நீங்களின்றி இது எதுவும் சாத்தியப்பட்டிருக்காது.

இந்தப் படத்துக்காக நீங்கள் எவ்வளவு போராடினீர்கள் என தெரிந்த ஒருவர், டீஸரில் உங்கள் பெயர் எங்கே என்று கேட்டார். அது என் பெயருக்குப் பின்னாலும், நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் இருக்கிறது என்றேன். தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா. உங்களைப் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார் துருவ் விக்ரம்.

.